Tuesday, February 9, 2010

இருவேறு நிலைப்பட்ட பதிப்புகள்: ஆசாரக்கோவை பதிப்பும் உரையும் பதிப்பு உருவாக்கப் பின்புலமும்

இருவேறு நிலைப்பட்ட பதிப்புகள் : ஆசாரக்கோவை
பதிப்பும் உரையும் நூல் உருவாக்கப் பின்புலமும்

இரா.வெங்கடேசன்
இளநிலை ஆய்வாளர்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
சென்னை - 05

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி தமிழ்ச்சூலில் நூல் அச்சாக்க முயற்சிகள் வெகுவாக முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதி. இந்தக் காலப்பகுதியில் பெரும்பாலான பழந்தமிழ் இலக்கண இலக்கியங்கள் அச்சுருவாக்கம் செய்யப்பட்டன. ஐரோப்பிய பின்புலத்தில் சமயத் தேவையை ஒட்டி உருவான புதிய அச்சுப்பண்பாடு அக்காலப்பகுதியைச் சார்ந்த தமிழார்வளர்களையும் பதிப்புத்துறையைச் சார்ந்த வணிகர்களையும் ஊக்கம்கொள்ள வைத்தன. இதன் விளைவாகச் சுவடியில் இருந்த பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களை அச்சாக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டனர். இன்று செவ்விலக்கியங்களாக அடையாளப்படுத்தப்படும் நூல்கள் மேற்கண்ட காலப்பகுதியில் அச்சாக்கம் பெற்றவற்றுள் முக்கியமானவையாகும்.
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட தொகைநூல்கள், தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கண நூல்கள், பக்தி இலக்கியங்கள் உள்ளிட்டவற்றிற்கு மேற்கண்ட காலப்பகுதியில் பெருமளவு பதிப்புகள் உருவாக்கப்பட்டு வெளிவந்தன. ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை, உ. வே. சாமிநாதையர் போன்றவர்கள் அந்தப் பணியைச் செய்தனர். நூல் பதிப்பு முறைமைகள் குறித்தான நுணுக்கங்களை இவர்கள் உருவாக்கித் தந்தனர். அதே காலகட்டத்திலும் அவர்களுக்குப் பிறகும் தொகைநூல்களின் வரிசையின் அடுத்த நிலையில் உள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைச் சிலர் அச்சிட்டனர் என்றாலும் மேற்கண்டவர்கள் உருவாக்கிய பதிப்புமுறைமையை கீழ்க்கணக்கு நூல்களை அச்சிட்டவர்கள் பின்பற்றியதாகத் தெரியவில்லை. தொகைநூல்களிடத்து இருந்த பதிப்பு முறைமைகள், நேர்த்தி, கீழ்க்கணக்கு நூல்களிடத்து இல்லை. அந்த வகையில் மேற்கண்ட காலப்பகுதியில் ஒரு திருந்திய பதிப்பு கீழ்க்கணக்கு நூல்களுக்கு உருவாக்கப்படவில்லை.
பாதிரிமார்கள் கிறிஸ்தவம் பற்றிய கற்பித்தலின்பொழுது தமிழ்நாட்டில் ஏற்கனவே நிலவிய நீதி நூல்களைப் பயன்படுத்தியதின் விளைவாக அந்நூல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.(2007.ப.18) இந்த தேவையை ஒட்டி சில கீழ்க்கணக்கு நூல்களுக்கு அச்சுப் பதிப்புகள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் திருக்குறளும் நாலடியாரும் முக்கியமான இடத்தைப் பெற்றன. அதன் தொடர்ச்சியாகம் அச்சூழக்குப் பிறகும் இவ்விரு நூல்களுக்கு நல்ல பதிப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. என்றாலும் ஏனைய கீழ்க்கணக்கு நூல்களுக்கு அந்தநிலை இல்லை.
ஆறுமுக நாவலர், சி.வை.தா., உ.வே.சா. போன்றவர்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, தொல்காப்பியம் போன்ற நூல்களைப் பதிப்பிக்க எடுத்துக்கொண்ட முயற்சியை கீழ்க்கணக்கு நூல்களைப் பதிப்பிக்க முயற்சித்தாகத் தெரியவில்லை. இவர்கள் தொகைநூல்களைப் பதிப்பிக்க முயற்சி மேற்கொண்டிருந்த அதே காலகட்டத்தில் கீழ்க்கணக்கு நூல்கள் பல அச்சாக்கம் பெறாது சுவடியில் இருந்துள்ளன. இருந்தும் அவற்றைப் பதிப்பிக்க எந்த முயற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. இவர்களின் கவனம் தொகைநூல்களைப் பதிப்பிக்கும் முயற்சிகளில் மட்டுமே இருந்துள்ளது.
மேற்கண்ட இவர்கள் தொகைநூல்களைப் பதிப்பிக்க முயற்சிமேற்கொண்டிருந்த காலகட்டத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைப் பதிப்பிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இருந்தும் தொகைநூல்களுக்கு உருவாக்கப்பட்ட பதிப்பு முறைமைகளைக் கீழ்க்கணக்கு நூல்களைப் பதிப்பித்த சிலரால் மேற்கொள்ளப்படவில்லை. பல சுவடிகளை ஒப்புநோக்கியும் மூலபாடத் திறனாய்வு செய்தும் கீழ்க்கணக்கு நூல்களுக்குப் பதிப்புகள் உருவாக்கப்படவில்லை. இந்த நிலையை நன்கு உணர்ந்திருந்த பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை 1938 ஆம் ஆண்டு ‘பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பதிப்பு முயற்சிகள்’ எனும் கட்டுரையில், கீழ்க்கணக்கு நூல்களுக்கு நல்ல திருந்திய பதிப்புகள் வெளிவரவில்லை என்று எழுதுகிறார். (1989,பக். 413-417) இதன் தொடர்ச்சியாகச் சில கீழ்க்கணக்கு நூல்களை அவர் பதிப்பித்து இருக்கிறார். இவ்வாறான தமிழ்நூல் பதிப்பு வரலாற்றுப் பின்புலத்தில் கீழ்க்கணக்கு நூல்வரிசையில் உள்ள ‘ஆசாரக்கோவை’ யின் உரை, பதிப்பு மற்றும் நூல் உருவாக்கம் குறித்த தகவல்களைப் பதிவு செய்யும் முயற்சியை இக்கட்டுரை மேற்கொள்கிறது.
பதிப்பு வரலாறு
பதினெட்டாம் நூற்றாண்டில் சங்கநூல்களும் கீழ்க்கணக்கு நூல்களும் சமயக் காழ்ப்புணர்ச்சி காரணமாகக் கல்வி நிலையங்களில் பயிற்றுவிக்காதநிலை இருந்துள்ளது. (1962.பக்.77,79) இந்த நிலை 19 ஆம் நூற்றாண்டில் மாற்றம் பெறத்தொடங்கியது. பிரித்தானியர்களின் கல்விக்கொள்கை இந்த மாற்றத்திற்கு அடிப்படைக் காரணமாக இருந்தது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் சில பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகச் சுவடியில் இருந்த அப்பிரதிகள் அச்சுக்குக் கொண்டுவரும் முயற்சிகள் நடந்தன. இந்தப் போக்குகளின் இடையில், பழம்பிரதிகள் அழிவுக்கு உட்படாமல் பாதுகாக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் பயனாகப் பாடத்திட்டங்களில் இல்லாதவற்றையும் அச்சுக்குக் கொண்டுவரும் முயற்சியைச் சிலர் மேற்கொண்டுள்ளனர். இந்த இருவேறு போக்குகளிலும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அச்சாக்கம் பெற்றுள்ளன.
1857 இல் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவையைத் திருத்தணிகை விசாகப்பெருமாளையர் முன்னிலையில் தில்லையம்பூர் சந்திரசேகர கவிராய பண்டிதரால் இலட்சுமீவிலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இது ஆசாரக்கோவைக்கான முதல் அச்சுப்பதிப்பாக உள்ளது(தி.ச. முன்னுரை. ப.3, 1893). கீழ்க்கணக்கு நூல்வரிசையில் உள்ள திருக்குறள் அச்சான(1812) கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் கடந்த நிலையில் அவ்வரிசையில் இருந்த ஆசாரக்கோவை அச்சான வரலாறு கவனிக்கத்தக்கது. இதன் பின்னர் சு. ப்பிரமணிய பிள்ளையவர்கள் 1883 இல் திருநெல்வேலி புதுத்தெரு ரெ. பரமசிவன் பிள்ளை விருப்பத்தின்படி தமது பாளையங்கோட்டை சிந்தாமணி யந்திரசாலையில் அச்சிட்டுப் பதிப்பித்துள்ளார். ஆசாரக்கோவை மூலமும் நச்சினார்க்கினியர் உரையும் கொண்ட பதிப்பு என்பதை அதன் முகப்புப் பக்கம் காட்டுகிறது. திருமணம் செல்வகேசவராய முதலியார் அவர்கள் 1893 இல் சென்னை பி.டி.வி. செங்கல்வராய நாயக்கருடைய அநாதை அச்சுக்கூடத்தில் ஆசாரக்கோவையை அச்சிட்டுப் பதிப்பித்துள்ளார். மேற்கண்ட இரண்டு பதிப்புகளும் 1857 ஆம் ஆண்டின் பதிப்பை அடிப்படையாகக் கொண்டு பதிப்பிக்கப்பட்டதான குறிப்புகள் அதன் முகப்பு பக்கத்தில் இடம்பெற்றுள்ளச்ன.
இந்நூல் கூறும் பற்பல ஆசாரங்களின் சம்பிரதாயங்களை இக்காலத்தறிவது கூடாமையால் கருத்துரையில் பிழைபட்ட இடங்களை ஆன்றோர் பிழைத்துக்கோடல் வேண்டும். அடியேனைப் பழிப்பதில் பயனின்று. பாக்களையேனும் இழவாமல் பாதுகாத்தல் வேண்டும் என்பதொன்றுமே இந்நூலினை அச்சிட்ட நோக்கம்.
இது ஆசாரக்கோவையைப் பதிப்பித்த செல்வகேசவராயரின் கருத்து. ஆசாரக்கோவைக்கு மாத்திரமல்ல பிற தமிழ் நூல்கள் பதிப்பிக்கப்படாமல் இருப்பதுபற்றியான கவலையையும் அவர் பதிவுசெய்கிறார்.
பண்டைத் தமிழ்ப்பனுவல்களைப் பதிப்பிப்பதென்றால் கையிலுள்ள பொருளைக் கொண்டுபோய் நட்டாற்றில் வலிய எறிந்துவிட்டு வெறுங்கையை வீசிக்கொண்டு வீடுபோய்ச் சேர்வதே முடிவான பொருள் என்பதுணர்ந்து எச்சரிக்கையாயிருப்பார்க்கு இன்னலொன்றுமில்லை. அம்முடிவான பொருளை அனுபவ சித்தமாக அறியப் பெறாதவர்கள் இன்னுஞ் சின்னாள் பழகியே அதனை அறிதல் வேண்டும். இதற்குள் அறிதுயிலமர்ந்து அயர்ந்துகிடக்கின்ற கனதனவான்கள் அத்துயிலுணர்ந்தால், அன்னவர் துணைகொண்டமின்,
கதிரவன் குணதிசைச்சிகரம் வந்தடைந்தான்
கணையிருளகன்றது காலையம் பொழுதாம்
………………………………..
அதிர் தலிலைகடல் போன்றதுளதெங்கும்
அந்தமிழ்ப்பாவாய் பள்ளியெழுந்தருளாயே
என்று திருப்பள்ளியெழுச்சி பாடுவோம். கண்வளர்த்தருளாய், தமிழாரணங்கே, தாயே தாலேலோ!.
தொடக்ககாலத்தில் தமிழ்நூல்களைப் பதிப்பித்தவர்கள் எதிர்கொண்ட இன்னல்கள் செல்வகேசவராயரின் மேற்கண்ட புலம்பலில் உள்ளது. இந்நூலை இரண்டாம் பதிப்பாக 1898 இல் பதிப்பித்து அவர் வெளியிட்டிருக்கிறார். மேற்கண்ட இரண்டு பதிப்பிலும் பழைய உரையைச் சில திருத்தங்கள் செய்து செல்வகேசவராயர் பதிப்பித்திருக்கிறார். இந்நூலை 1916 ஆம் ஆண்டு மூன்றாம் பதிப்பாக அச்சிடுகையில், பழைய பொழிப்புரையைத் திருத்தங்கள் செய்யாது உள்ளபடியே சேர்த்துப் பதிப்பித்திருக்கிறார். இந்தப் பதிப்பிற்கு தி. கனசுந்தரம் பிள்ளையிடமிருந்து கிடைத்த ஓலைச்சுவடி உதவியாக இருந்துள்ளது. இப்பதிப்பில் சில உரைவேறுபாடுகளையும் எடுத்துக்காட்டிப் பொருளட்டவணை அரும்பத அகராதி முதலானவற்றையும் சேர்த்து, முன்பதிப்பித்த இரண்டு பதிப்புகளைப் போன்று இல்லாமல் புதிய வடிவில் கட்டமைத்து இப்பதிப்பை வெளியிட்டிருக்கிறார்.
1899 இல் அருணாசலசரணர் குமாரர் நாராயண சரணரால் தஞ்சாவூர் ஸ்ரீகிருஸ்ணவிலாச அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்டு ஒரு பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நச்சினார்க்கினியர் செய்த உரையுடன் கூடிய பதிப்பு என்ற குறிப்புடன் இப்பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பதிப்புகளின் அடிப்படையில் ஆசாரக்கோவைக்கான உரைகுறித்தான போக்குகள் இருவேறு விதமானதாக இருந்துள்ளது. அவை ‘நச்சினார்க்கினியர் உரை’ மற்றொன்று ‘பழைய உரை’, என்ற என்பனவாகும். இந்த இரு போக்குகளின் இடையில் மூலம் மட்டுமுள்ள பதிப்பு உருவாக்கமும் நிகழ்ந்துள்ளன.
1916 இல் பலவான்குடி மு.மு.வீர.வீரப்பசெட்டியாரால் மூலம் மட்டும் உள்ள பதிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்பதிப்பு கோநகர் தனவைசியன் அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்டுள்ளன. மாணவர்களுளிடத்து நீதிக்கருத்துகள் சென்றடையும் நோக்கத்துடன் இப்பதிப்பு உருவாக்கப்படுவதான குறிப்பு நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு விலையின்றி கொடுக்கப்படும் என்ற குறிப்பும் நூலில் காணப்படுகின்றன. கிறித்துவ மதப்பரவலுக்கு எதிரான செயல்பாடுகளை முன்னேடுத்ததில் ‘பாகநேரி தனைவைசியர் இளைஞர் மன்ற’த்திற்கு முக்கியப் பங்கு இருந்துள்ளது. இந்த அமைப்பின் பின்புலத்தில் செயல்பட்ட அச்சியந்திரசாலையில் இந்நூல் அச்சிடப்பட்டு இலவசமாக வழக்கப்பட்ட செய்தி முக்கியமானதாகும்.
1939 ஆம் ஆண்டிற்குப் பிறகு நச்சினார்க்கினியர் உரை, பழைய உரை என்ற குறிப்புகள் இல்லாது விருத்தியுரையுடன் கூடிய நூலாக ஆசாரக்கோவை அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. 1939 இல் பாளையங்கோட்டை அர்ச் சவேரியர் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியராக இருந்த பு.சி. புன்னைவனநாத முதலியார் எழுதிய விருத்தியுரையுடன் கூடிய பதிப்பைச் சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது. இதன் மறுபதிப்புகள் 1949, 1954, 1960 எனத் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. 1959 இல் மர்ரே நிறுவனம் சந்தி பிரித்த பதிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் பின்னர் மேற்கண்ட பதிப்புகள் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு இன்றைய பதிப்பகங்கள் ஆசாரக்கோவையைப் பதிப்பித்து வெளியிட்டுவருகின்றன. இவர்கள் வெளியிடும் பதிப்புகள் முழுக்க வணிகரீதியிலானவை. அந்த காகித குப்பைகள் பற்றிப் பேசும்படியான செய்திகள் இல்லை.
மேற்குறித்த ஆசாரக்கோவையின் பதிப்புகளை ஒருங்குவைத்துப் பார்க்கின்ற சூழலில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான பதிப்பு முறைமைகளைக் கொண்டு செல்வகேசவராயர் மட்டுமே அந்நூலைப் பதிப்பித்திருக்கிறார். தனக்கு முன்னாள் பதிப்பித்த சிலர் ஆசாரக்கோவைக்கு இருந்த உரையை நச்சினார்க்கினியர் உரை என்று கருதி பதிப்பித்து வெளியிட்டுள்ளனர். அதைக் கண்னை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ளாமல் சில தமிழறிஞர்களோடு கலந்துபேசி அவ்வுரை நச்சினார்க்கினியர் உரை இல்லை என்ற முடிவுக்கு அவர் வருகிறார். பின்னர் அதைப் பெயர் தெரியா ஆசிரியர் உரையாதலின் பழைய உரை என்ற அடையாளமிட்டுப் பதிப்பித்திருக்கிறார். சோடசாவதானம் சுப்பராயச் செட்டியார் 1874 இல் ‘பழமொழி’க்கு இருந்த பழைய உரியுடன் புதிய உரை எழுதிசேர்த்தும் பாடல் அமைப்பை மாற்றியமைத்தும் பதிப்பித்திருக்கிறார். இதை மறுத்து பழைய உரையை உள்ளபடியே சேர்த்து 1916 ஆம் ஆண்டு ‘பழமொழி’ யைச் செல்வகேசராய முதலியார் அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார். (1989,பக். 413-417) இவ்வாறு பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் சிலவற்றிற்கு நல்ல பதிப்புகள் உருவாக்குவதில் அக்கறையுடன் அவர் செயல்பட்டுள்ளார்.
மேலும் பாடல், பழைய பொழிப்புரை, பதவுரை, கருத்துரை என்னும் அமைப்பிலான பதிப்பைப் செல்வகேசவராயர் வெளியிட்டிருக்கிறார். ஆக வாசகன் எளிமையாக அணுகும் தன்மையிலான பதிப்பை அவர் ஒருவர் மட்டுமே வெளியிட்டிருக்குறார் எனும் செய்தியை ஆசாரக்கோவை பதிப்பு வரலாற்றின்வழி பெறமுடிகிறது. (பதிப்புப் பட்டியல் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளது)
பதிப்பும் – பாடவேறுபாடுகளும்
ஆசாரக்கோவைக்குப் பல்வேறு பதிப்புகள் வெளிவந்துள்ள நிலையில் பாடவேறுபாட்டாய்விற்கு மூன்று பதிப்புகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. முதற் பதிப்பு(1857) கிடைக்காத நிலையில் ச. சுப்பிரமணிய பிள்ளையால் அச்சிட்டு 1883 இல் வெளிவந்த பதிப்பும், நாராயணசரணரால் அச்சிட்டு 1899 இல் வெளிவந்த பதிப்பும் தி. செல்வகேசராயரின் 1916 இல் வெளிவந்த பதிப்பும் பாடவேறுபாட்டாய்விற்கு ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. 1893 இல் வெளிவந்த செல்வகேசவராயரின் பதிப்பு கிடைக்காதநிலையில் இரண்டாம் பதிப்பைக் (1898)காட்டிலும் அவரது மூன்றாம் பதிப்பு (1916) சிறந்த பதிப்பாக உள்ளதன் அடிப்படியில் 1916 இல் வெளிவந்த பதிப்பை ஆதாரமாகக் கொண்டு பாடவேறுபாடுகள் தொகுக்கப்பட்டுள்ளன.
எடுத்துக்கொள்ளப்பட்ட மூன்று பதிப்புகளில் ச. சுப்பிமணிய பிள்ளைப் பதிப்பு (1883) செல்வகேசவராயர் பதிப்பு(1916) ஆகிய இரண்டு பதிப்புகளில் உள்ள மொத்தப் பாடல்களில்(கடவுள் வாழ்த்து உட்பட 101 பாடல்கள்) எட்டுப் பாடல்கள் நாராயணசரணர் பதிப்பில் (1899) விடுபட்டுள்ளன. அதேவேளையில் மற்ற இரண்டு பதிப்புகளில் இல்லாத மிகைப்பாடல் ஒன்றும் இப்பதிப்பில்(1899) இடம்பெற்றுள்ளது. (இந்த மிகைப்பாடல் பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது)
மேற்கண்ட மூன்று பதிப்புகளை ஒப்புநோக்கிப் பார்த்ததன் அடிப்படையில் 52 பாடவேறுபாடுகள் தொகுக்கப்பெற்றுள்ளன. இந்தப் பாடங்களுள் சிலவற்றைப் பிரதிசெய்வோரால் உருவானவையாகச் சொல்லலாம். குறிப்பாக,
றென்ருரையார் – றென்றுரையார்
மனைகவிழார்- மணைகவிழார்
போன்ற பாடங்களை அவ்வகையினவாக அடையாளப்படுத்தலாம். இப்பாடங்கள் பாடலில் மட்டுமே வேறுபடுகின்றன. உரைப்பொருளில் ஒரே பொருண்மையில் காணப்படுகின்றன.
செல்வகேசவராயர் பதிப்பு(1916), ச.சுப்பிரமணியபிள்ளை பதிப்பு(1883) இரண்டும் விசாகப்பெருமாளையர் முன்னிலையில் பதிப்பித்த பிரதியை(1857) அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டிருப்பினும் இரண்டிற்குமான பாடங்கள் பெரும்பாலும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. ஆனால், நாராயணசரணர் பதிப்பு(1899) செல்வகேசவராயர் பதிப்பு(1916) இரண்டிலும் பெரும்பாலான பாடங்கள் ஒத்து காணப்படுகின்றன. நாராயணசரணரின் பதிப்பில் உள்ள பாடங்கள் சிலவற்றைச் சுப்பராய முதலியார் பாடவேறுபாடாகக் காட்டுகிறார்.
தொகுக்கப்பெற்ற பாடங்கள் முழுவதையும் விவாதிப்பின் தனி ஆய்வாக விரியும் நிலையில், ஒரு சில பாடங்களை மட்டும் விவாதித்து மதிப்பீடு செய்யப்படுகின்றன. பெரும்பாலான பாடங்கள் பாடலில் மட்டும் வேறுபட்டு உரைகளில் ஒரே பொருண்மையிலுமாக காணப்படுகின்றன. உதாரணமாகச் சில பாடங்களைக் காண்போம்.
1. கொள்ளார் – கொல்லார் - இவற்றுள் ‘கொள்ளார்’ எனும் பாடம் 1899, 1916 ஆம் ஆண்டு பதிப்புகளிலும் ‘கொல்லார்’ எனும் பாடம் 1883 ஆம் ஆண்டு பதிப்பிலும் இடம்பெற்றுள்ளன. ‘தம்பொருட்டூன் கொள்ளார்’ /‘தம்பொருட்டூன் கொல்லார்’(பா.39) எனும் பாடல் வரிக்கு ‘தெய்வப்பொருட்டன்றித் தம் காரணத்தால் கொன்று ஊனைக் கொள்ளார், எனும் உரைப்பொருளே பொதுமைப்பட மூன்று பதிப்புகளிலும் காணப்படுகின்றன.
2. சேரியகத்தும் – சேரியனைத்தும் - இந்த இருபாடங்களில் ‘சேரியகத்தும்’ எனும் பாடம் செல்வகேசவராயர் பதிப்பு, நாராயணசரணர் பதிப்பிலும் காணப்படுகின்றன. ‘சேரியனைத்தும்’ ச.சுப்பிரமணியபிள்ளை பதிப்பில் உள்ள பாடமாகும். ஆக இந்த இரு பாடத்திற்கும் , ‘பொதுமகளிர் சேரிக்கண்ணும்’, ‘பொதுமகளிர் சேரியிலும்’ என்னும் உரைப்பாடமே காணப்படுகின்றன. இவ்வுரைப் பாடத்தில் பொருண்மைநிலையில் எந்த மாற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை.
இதைப்போன்றே பெரும்பாலான பாடங்கள் காணப்படுகின்றன. இவற்றைப் பாடவேறுபாடாகக் கொள்ளாமல் சுவடி பெயர்த்து எழுதுவோரால் நேர்ந்த பாடமாக அடையாளப்படுத்தலாம். (பாடவேறுபாட்டுப் பட்டியல் பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது).
பதிப்பும் உரை வேறுபாடும்
ஆசாரக்கோவைக்கு அமைந்த உரையைப் பற்றி இருவேறுபட்ட கருத்துகள் இருந்ததை அறிகிறோம். இந்நூலைப் பதிப்பித்த பதிப்பாசிரியரிடத்து இந்த வேறுபட்ட கருத்துகள் நிலவிவந்துள்ளன. ச. சுப்பிரமணிய பிள்ளையும், நாராயணசரணரும் நச்சினார்க்கினியர் உரை என்ற குறிப்புடனேயே ஆசாரக்கோவையைப் பதிப்பித்துள்ளனர். ‘மதுரை ஆசிரியராகிய பாரத்துவாசி நச்சினார்க்கினியரால் அருளிச்செய்யப்பட்ட உரையும்’(1883) என்றும் ‘நச்சினார்க்கினியர் செய்த பொழிப்புரையும் (1899) என்ற குறிப்புகள் இரண்டு பதிப்பிலும் காணப்படுகின்றன.
1893 ஆம் ஆண்டு செல்வகேசவராயர் பதிப்பில் பழைய உரை என்ற குறிப்பே காணப்படுகின்றது. ஆசாரக்கோவைக்கு அமைந்த உரை நச்சினார்க்கினியர் உரை இல்லை அது பழைய உரை என்ற குறிப்பையே பதிப்புரையில் அவர் தந்திருக்கிறார்.
“முதன்முறை பதிப்பித்தவர்கள் ஆசாரக்கோவையின் உரையை நச்சினார்க்கினிய ருரையெனக் கூறியிருக்கின்றார்கள். நச்சினார்க்கினியனார்க்கிய ருரைச்சிறப்புப் பாயிரத்தில் இதற்கு ஆதரவில்லை. இப்போது அச்சிடத்தொடங்கிய பின்னர்; சிற்சிலவிடத்துப் பாவுடன் உரையின் முடிபினைப் பொருத்த இயலாமல் இடர்படுவேன். சில பேராசிரியர்களை உசாவி யவிடத்தும் அன்னார் ஆசாரக்கோவையுரை நச்சினார்க்கினியருரை யன்றென்றே உறுதிகூறினார்கள்.”(பதிப்புரை. 1893)
பலருடன் விவாதித்ததன் அடிப்படையில் ஆசாரக்கோவைக்கு இருந்த உரை பழைய உரை என்ற முடிவுக்கு அவர் வருகிறார். முதன்முறை பதிப்பித்தவர்கள் என்று முதலியார் கூறுவதன்வழி தில்லையம்பூர் சந்திரசேகர கவிராய பண்டிதர் பதிப்பித்த முதல் பதிப்பும் நச்சினார்க்கினியர் உரை என்ற குறிப்புடனேயே வெளிவந்திருக்க வேண்டும்.
ச.சுப்பிரமணிய பிள்ளை பதிப்பு(1883), நாராயணசரணர் பதிப்பு(1899) இரண்டும் நச்சினார்க்கினியர் உரை என்ற குறிப்புடன் பதிப்பிக்கப்பட்டிருப்பினும் இரண்டிற்குமான உரை அமைப்பு வேறுபாட்டுடன் காணப்படுகின்றன. உதாரணமாக,
“நீரின்கட் டன்னிழலை விரும்பி நோக்கார், நிலத்தை யிருந்துகீறார், இரவின்கண் ணொருமரத்தின்கண்ணுஞ் சேரார், நோய்கொண் டிடர்ப்பட்டாராயினும் நீரைத் தொடாதே யெண்ணெயு டம்பின்கட்டேயார். அவ்வெண்ணெய் தேய்த்தபின் றம்முடம்பின்மேல் நீரைத் தெளித்துக் கொள்ளாது புலையைத் தன்கண்ணா னொக்கார்.”
என்று 1883 ஆம் ஆண்டு பதிப்பிலும்,
“நீரில் தமதுசாயையை விரும்பிப்பாரார் இருந்து நிலத்தைக் கீறார் இராப்பொழுதில் ஒருமரத்தையும் அணுகார் பிணியால் துன்பமாயினும் நீரைத்தொடாமல் எண்ணெய் உடம்பிற் றேய்த்துக்கொள்ளார் தேய்த்துக்கொண்டபிறகு தம்உடம்பின்மீது நீர்த்தெளித்துகொள்ளாமல் புலையனைப் பார்க்கமாட்டார் அறிவுடையோர் என்பதாம்.”
என்று 1899 ஆம் ஆண்டு பதிப்பிலும் 14 ஆம் பாடலுக்கான உரை அமைப்பு காணப்படுகின்றன.
‘உரையிலக்கியத்தைப் பொறுத்த வரையில், பாடவிமர்சனம் தொடக்க நிலையிற்கூட இல்லை’ (2007.ப.4). பதிப்புலகில், மூலபாடத்தைப் பல பிரதிகளோடு ஒப்புநோக்கி பாடவிமர்சனம் செய்யும் போக்கு ஓரளவு பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆனால், உரைப்பாடத்தை ஒப்புநோக்கி பாடநிர்ணயம் செய்யும் போக்கு இல்லை. அவ்வாறான முறையைப் பின்பற்றுவதன்மூலமே, மேற்காணப்பட்ட மூலத்திற்கும் உரைக்குமான வேறுபாடுகளை இனங்கான முடியும்.
ஆசாரக்கோவைக்கான உரை நச்சினார்க்கினியர் உரையன்று எனும் முடிபினை செல்வகேசவராயர் கொண்டிருந்தாலும் அவ்வுரையை எவ்வாறு அடையாளப்படுத்துவது என்ற தயக்கம் அவரிடம் முதலில் இருந்திருக்கின்றது. 1893, 1898 ஆம் ஆண்டு பதிப்புகளில், உரையை ‘இதன் பொருள்’(இ.பொ.) என்ற குறிப்புடன் தந்திருப்பதன்வழி அதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால், 1916 ஆம் ஆண்டு மூன்றாம் பதிப்பாக அச்சிடுகையில் தெளிவான முடிவுடன் ‘பழைய பொழிப்புரை’(ப.பொ) என்ற குறிப்புடனேயே பதிப்பிக்கிறார்.
இருவேறுநிலைப்பட்ட போக்குகளும் நூல் உருவாக்கமும்
ஆக ஆசாரக்கோவைக்கமைந்த உரையைப் பற்றிய தனக்கு முன்பிருந்த குழப்பான நிலையைச் செல்வகேசவராயர் போக்கியுள்ளார். தனக்கு முன் பதிப்பித்தவர்களைப் போன்று கண்மூடித்தனமான போக்குகளைப் பின்பற்றாமல் ஆசாரக்கோவையைத் திருந்திய பதிப்பாக வெளியிட சிரத்தையுடன் அவர் செயல்பட்டுள்ளார். அவர் பதிப்பித்த அந்த பதிப்பை ஆதாரமாகக்கொண்டே இன்று பதிப்புகள் வெளியிடப்படுகின்றன. எந்த பதிப்பை ஆதாரமாகக்கொண்டு புதிய பதிப்புகள் உருவாக்கப்படுகின்றன என்ற தகவலைப் பதிவுசெய்கின்ற வழக்கம் தமிழ்ச்சூழலில் பின்பற்றப் படுவதில்லை. ஏதோ தாங்களே சுவடியைப் ஒப்புநோக்கிப் பார்த்து, பாடநிர்ணயம் செய்து பதிப்பிப்பதான எண்ணத்துடனேயே இன்றைய பதிப்பாளர்கள் பழம்பிரதிகளைப் பதிப்பித்துவருகின்றனர். இவ்வாறானபோக்குடன் 1939 ஆம் ஆண்டு கழக வெளியீட்டதைத் தொடர்ந்து ஆசாரக்கோவையைப் பதிப்பித்துவருகின்றனர்.
இறுதியாக ஆசாரக்கோவையின் பதிப்பு வரலாறு பற்றியும், உரையைப் பற்றியும் தொகுத்து பார்க்கின்ற சூழலில் நமக்கு அப்பிரதி பற்றியான சில குறிப்புகளைப் பெறமுடிகிறது. பழம்பிரதியை மீட்டுருவாக்கம் செய்யும் பணியை ஒரு பதிப்பாசிரியன் மேற்கொள்வதாக இருக்கவேண்டும். அந்தப் பணியைச் செல்வகேசவராயர் செய்திருக்கிறார் என்று சொல்லலாம்.
அதே வேளையில் ஆசாரக்கோவைக்கான உரையை நச்சினார்க்கினியர் உரை என அடையாளப்படுத்தப்பட்டதின் பின்புலம் என்ன என்பதை ஆய்வுசெய்யவேண்டியுள்ளது. இந்நிலையில் அந்நூல் உருவாக்கம் குறித்தான செய்திகளை அறிந்துகொள்வதும் அவசியமாகிறது.
இலக்கிய வரலாற்று நிலைநின்று நோக்குகின்றபொழுது, ஒவ்வொரு காலப்பிரிவிலும், தோன்றுகின்ற இலக்கியங்கள் பற்றிய தரவுகள் எத்தனை முக்கியமானவையோ, அத்தனை முக்கியமானவை ஒவ்வொரு காலத்திலும் நிலவும் நூலுற்பத்தி முறைமை பற்றிய அறிவுமாகும். பொருளாதார உற்பத்திக்குச் சொல்லப்படுவதுபோல தோற்றுவிப்பு, தயாரிப்பு, சந்தைப்படுத்தல், நுகர்வோர் என்பன போன்ற பெரும்படையான தலைப்புகள் மாத்திரமல்லாமல் தோற்றுவிப்பதில் தொழிற்படும் தொழில்நுட்பங்களும் முக்கியமானவையாகும். எழுதப்படும் ஏடு, அது எழுதுவதற்குத் தயாராக்கப்படும் முறைமை, அது கட்டப்படும் முறைமை என்பவையும் இலக்கியப்படைப்பு எவ்வாறு ஏட்டுருப்படுத்தப்படுகிறது என்பது பற்றிய நடைமுறையும் முக்கியமான தொழில்நுட்ப அம்சங்களாகும். (2007.ப.29)
மேற்குறித்த சிவத்தம்பி கூற்றிலிருந்து ஆசாரக்கோவை நூல்உருவாக்க முறைமைகள் குறித்தான சில தகவல்களைக் குறிப்பிடலாம்.
ஆசாரக்கோவை பதிப்பு உருவாக்கம் குறித்தான பின்புலத்தைத் தேடிப்பார்க்கின்றபொழுது ஒரு உறுதியான காரணத்தைச் சொல்ல முடியவில்லை. சந்தைப்படுத்தல், நுகர்வோர் குறித்தான அம்சங்களில் பார்க்கின்றபொழுது பதிப்பு உருவாக்க காலத்தில் கல்வி நிலையம் சார்ந்த பாடத்திட்டங்களில் இந்நூல் இடம்பெற்றிருந்ததற்கான குறிப்புகள் இல்லை. இப்படியான சூழலில் நூல் உருவாக்கம் எவ்வாறு நடைபெற்றது என்ற வினா எழுகிறது.
இந்நூல் உருவாக்க காலத்து முன்னைய, பின்னைய சமூகச் சூழலை அவதானிக்கின்ற பொழுது மேற்கண்ட வினாவிற்கு விடை காணமுடியும். கிறித்துவ மதப்பரப்பலுக்கு எதிர்நிலையிலான செயல்பாடுகள் சில இந்த நூல்உருவாக்க காலத்திற்கு முன் நிகழ்ந்துள்ளன. அவற்றுள் முக்கியமானதாக வைதீகம் சார்ந்த நூற்பதிப்பு செயல்பாடுகளாகும். ஆறுமுக நாவலரின் சைவ வினாவிடை(1875), வயி.நாக.ராம.அ.இராமநாதச்செட்டியாரின் சைவசமயிகளுக்கு விக்கியாபனம்(1896) ஆகியன மேற்குறித்த பின்புலத்தில் உருவாக்கப்பட்ட நூல்களாகும்.
Ø கிறிஸ்துமதத்தைக் கண்டிப்பனவும் சைவ சமயத்தைத் தாபிப்பனவுமாகிய துண்டுப்பிரசுரங்களை எங்கும் பரப்புதல்.
Ø சைவசமயப் பிள்ளைகளைப் பாதிரியார் பள்ளிக் கூடங்களுக்குப் போகவிடாமற்றடுத்தல்.
Ø கிறிஸ்தவர் பள்ளிக்கூடங் கட்டவும் கோயில் கட்டவும் நம்மவர்கள் பொருள் வாஞ்சையினாலே நிலம் கொடாதபடி தடுத்தல்(1896.ப.8)
மேற்குறித்த சைவசமியிகளுக்கு விக்கியாபன நூலில் இடம்பெற்ற இந்த வாசகம் முக்கியனானவையாகும். இந்த மாதிரியான செயல்பாட்டின் தொடர்ச்சியாக வைதீகம் சார்ந்த ஒழுக்கங்களைக் கூறுகின்ற ஆசாரக்கோவை நூல் உருவாக்க முயற்சியும் நடந்திருக்கலாம்.

துணைநூல்கள்

1. கனகரத்தினம். இரா.வை., ஆறுமுக நாவலர் வரலாறு: ஒரு புதிய பார்வையும் பதிவும், பூரணம் வெளியீடு, கொழும்பு, முதற்பதிப்பு, 2001.
2. சிவத்தம்பி கார்த்திகேசு, தமிழ்நூற் பதிப்பு பணியில் உ.வே.சா. பாடவிமர்சனவியல் நோக்கு, குமரன் புத்தக இல்லம், சென்னை, 2007
3. தம்பையாபிள்ளை.சி, சைவசமயிகளுக்கு விக்கியாபனம், வயி. நாக. ராம. அ.இராமநாதச்செட்டியார் (ப.ஆ), மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1896
4. வேங்கடசாமி, மயிலைசீனி, பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம், அழகப்பா புத்தக நிலையம், திருச்சி, முதற்பதிப்பு, 1962.
5. வையாபுரிப்பிள்ளை, பேராசிரியர்.எஸ். இலக்கியச் சிந்தனைகள், வையாபுரிப்பிள்ளை நூற்களஞ்சியம், முதல் தொகுதி, பேராசிரியர் எஸ். வையாபிரிப்பிள்ளை நினைவு மன்றம், முதற்பதிப்பு- 1989.