Tuesday, August 18, 2009

வ.உ.சி.பதிப்புகள்

வ.உ.சி.யின் பதிப்புப்பணி
இரா.வெங்கடேசன்
இளநிலை ஆய்வு வளமையர்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

கல்லூரி ஆசிரியர் பணியில் சேர, ஐ.எஸ்.பி.என்(ISBN)நம்பரோடு கூடிய நூலை வெளியிட்டிருந்தால்தான் தகுதியாளர் என்று அரசு அறிவிப்பு வந்தவுடன், அடுத்தவர் எழுதிய நூலைக்கூடத் தன் பெயரில் அச்சிட்டுக்கொள்ளப் பதிப்பகத்தைத் தேடி தெருத் தெருவாக அலையும் இன்றைய இளைய தலைமுறையினரில் பலருக்கு வ.உ.சிதம்பரனாரின் பதிப்புப்பணி பின்புலத்தைத் தெரிந்து வைத்திருக்க வாய்ப்பு இல்லைதான்.
சுயநல உணர்வில் தன் மரபையே மறந்து போன தமிழனுக்கு வ.உ.சி.யின் பதிப்புப் பணியை மறந்து போயிருப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல. வ.உ.சி. யின் மாபெரும் அரசியல் சாதனைகளே மறக்கப்படும் நிலையில், அதிகம் அறியப்படாதவையான அவருடைய தமிழ்ப்பணியின் ஒரு பகுதியான பதிப்புப்பணியின் நிலை கேள்விக்குறிதான்.
தமிழன் என்றுமே வரலாற்றை மறந்து போகக்கூடியவன் என்பதற்கு “நாட்டுப்பற்றால் முன்னே நாய்படாப் பாடுபட்ட , ஓட்டைப் பிடார ஒளிர்மறவன் -மாட்டன்று, நன்றி பாராட்டாத நாடொரு நூற்றாண்டு , சென்ற பின் செய்யும் சிறப்பு” என்று வ.உ.சி. நூற்றாண்டு விழா நேரத்தில் பாவாணர் கூறிய பாடலே சான்றாகும்.
பலரின் தமிழ்நூல் பதிப்புப்பணி, வரலாற்றில் பரந்து காணப்பட்டாலும், வ.உ.சி. யின் பதிப்புப்பணியை வியந்து பார்ப்பதற்குக் காரணம், கோவை சிறையில் செக்கிழுத்த சூழலிலும் தொல்காப்பியத்தை வாசித்து அதன் பெருமையை உணர்ந்து எளிய உரையொன்று எழுதிப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று அவர் சிந்தித்த ‘சிந்தனைச் சூழலை’த். தவிர வேறொன்றுமில்லை.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை யாருமே அறியாது, ஓலைச்சுவடிகளில் உறங்கிக்கிடந்த தொல்காப்பியப் பொருளதிகார இளம்பூரணர் உரையை அச்சிட்டுத் தமிழ் ஆய்வுலகிற்கு வழங்கியவர் வ.உ.சி. அவர்களேயாகும். எழுத்ததிகார, சொல்லதிகாரத்திற்கு இளம்பூரணர் உரையுடன் 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலேயே வெளிவந்துவிட்டன. 1920 -இல் கா.நமச்சிவாய முதலியார் பொருளதிகார அகத்திணை, புறத்திணையியலை மட்டும் இளம்பூரணர் உரையுடன் அச்சிட்டு வெளியிட்டிருந்தாலும், பொருளதிகாரம்-இளம்பூரணர் உரையை முழுவதுமாக முதன் முதல் வ.உ.சி.யே பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.
1910 -ஆம் ஆண்டு கோவைச் சிறையில் செக்கிழுத்துக் கொண்டிருந்த சூழலுக்கு இடையிலும், தொல்காப்பியத்தை முழுவதுமாக வாசித்துள்ளார். இந்த வாசிப்பின் விளைவாகப் பழைய உரைகளின் கடுநடையை உணர்ந்து எளிய உரை எழுத எண்ணியிருந்தார். சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் எளிய உரையும் எழுதியுள்ளார். பின்னர் சென்னை எழும்பூரில் வசித்தகாலத்தில் தான் எழுதிய உரையைப் பூர்த்தி செய்யக்கருதி தி. செல்வகேசவராய முதலியாரிடம் எடுத்துச் சென்று சரிபார்த்துள்ளார். அப்பொழுது தொல்காப்பிய இளம்பூரண அச்சுப்புத்தகமும் சொல்லதிகார ஏட்டுப்பிரதியும், பொருளதிகார ஏட்டுப்பிரதி சிலவும் த.கனகசுந்தரம் பிள்ளையிடமிருந்து கிடைத்துள்ளது. அதைப் படித்துப்பார்த்தபோது இளம்பூரணரின் எளிய உரையைக்கண்டு தான் உரை எழுதுவதை விடுத்து, தொல்காப்பியம்-இளம்பூரணர் உரையைப் பதிப்பிக்கும் பணியைத் தொடங்கியுள்ளார்.
1920- ஆம் ஆண்டு தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தையும், பொருளதிகாரத்தையும் இளம்பூரணர் உரையுடன் அச்சிடத் தொடங்கியுள்ளார். 1921- இல் பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல் ஆகிய இரண்டு இயல்களைக் கொண்ட முதல் தொகுதியை அச்சிட்டு வெளியிட்டுள்ளார். 1928- இல் எழுத்ததிகார இளம்பூரணர் உரையை வெளியிட்டுள்ளார். பொருளதிகார இளம்பூரணர் உரை ஏடுகளை எஸ்.வையாபுரிப்பிள்ளை, தி. நா. சுப்பிரமணிய அய்யர், த. மு. சொர்ணம்பிள்ளை முதலானோரிடமிருந்து வ.உ.சி.பெற்றுள்ளார்.
பொருளதிகாரத்தின் எஞ்சிய ஏழு இயல்களை வையாபுரிப்பிள்ளை உதவியுடன் 1938 - இல் களவியல், கற்பியல், பொருளியல் எனும் மூன்று இயல்களைச் சேர்த்து ஒரு தொகுதியாகவும் 1936 - இல் மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் எனும் நான்கு இயல்களைச் சேர்த்து ஒரு தொகுதியாகவும் அச்சிட்டு வெளியிட்டுள்ளார். இவ் ஏழு இயல்களில் மாத்திரம் 878 பாடவேறுபாடுகளை வ.உ.சி. சுட்டிக்காட்டியுள்ளதாகக் க.ப. அறவாணன் கூறுவார். (செந்தமிழ் செல்வி. செப்.1972) இச் செய்தி வ.உ.சி. யின் கடின உழைப்பை புலப்படுத்துவதாக உள்ளது.
இப்பதிப்புகளின் வெளியீட்டிற்கு த.மு.சொர்ணம் பிள்ளையின் கடிதப்பிரதி, தி.நா. சுப்பிரமணிய அய்யர் கடிதப்பிரதி, எஸ். வையாபுரிப்பிள்ளையின் ஏட்டுச்சுவடி முதலியன உதவியதாகவும் வாவிள்ளா இராமஸ்வாமி சாஸ்த்ருலு பொருளுதவி புரிந்ததாகவும் வ.உ.சி. அப்பதிப்புகளின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். இது அவரின் நன்றிமறவா உள்ளத்தைக் காட்டுவதாக உள்ளது.
தொல்காப்பிய எழுத்து, சொல், பொருள் எனும் மூன்று அதிகாரத்திற்குமான நச்சினார்க்கினியர் உரையுடன் கூடிய பதிப்பை சி.வை.தாமோதரம்பிள்ளைப் பதிப்பித்து வெளியிட்டதைப் போன்று, தொல்காப்பியம் முழுமைக்குமான இளப்பூரணர் உரையைப் பதிப்பிக்க வ.உ.சி. எண்ணியிருந்தார் என்பதை 1928 -ன் எழுத்ததிகாரப் பதிப்புரையின் வழி தெரியவருகிறது. ஆனால் என்ன காரணத்தாலோ எழுத்து, பொருள் எனும் இரண்டு அதிகாரத்தை மட்டும் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார்.
தொல்காப்பியம் பொருளதிகார இளம்பூரணர் உரை மட்டுமல்லாது திருக்குறள் மணக்குடவர் உரையை முதன்முதல் அச்சிட்டு வெளியிட்டவரும் வ.உ.சி.தான். அப்பதிப்பு 1917-இல் வெளிவந்துள்ளது. இதே ஆண்டில் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இன்னிலைக்கும் விருத்தியுரை எழுதி வெளியிட்டார்.
வ.உ.சி. பதிப்புகளின் சிறப்புக் கூறுகளாக இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று ஏட்டுப்பிரதிகளிலும் அவருக்கு முந்தைய பதிப்புகளிலும் நூற்பாவுக்குத் தரப்பட்டிருந்த பொழிப்புரைக்கு மாற்றாகப் பதவுரை எழுதிப் பதிப்பித்தது. இரண்டு உரைவேறுபாடு காட்டல். உதாரணமாக நூன்மரபு 14 ஆவது நூற்பாவிற்கு “புறத்துப்பெறும் புள்ளியோடு உள்ளாற்பெறும் புள்ளி மகரத்திற்கு வடிவம்” என்ற இளம்பூரணர் உரையை மறுத்து “உள்ளாற் பெறும் புள்ளி குறுகிய மகரத்திற்கு வடிவம்” என்பதே இச்சூத்திரத்திற்குச் சரியான உரை எனக்குறிப்பிட்டுப் ‘புறத்தாற் பெறும்புள்ளி’ என்னும் சொற்றொடரைத் தேவையற்றதாக்கி உரைவேறுபாடு காட்டுகிறார். (தொல்.இளம்.1928)
தன் அரசியல் போராட்ட வாழ்க்கைச் சூழலிலும் வ.உ.சி. பதிப்பணியில் ஈடுபட எது காரணமாக இருந்திருக்கும். தனியாத தமிழ் ஆர்வமும் 1912 -ல் சிறையிலிருந்து வெளிவந்த பின்னர் திருமணம் செல்வக்கேசவராய முதலியார், எஸ்.வையாபுரிப்பிள்ளை போன்றோரிடத்து ஏற்பட்ட நட்புமே காரணமாக இருந்திருக்க வேண்டும்.
தமது நாற்பதாண்டுக் காலப் பணியை(அரசியல் பணி) மக்கள் போதிய அளவு உணரவில்லையே என்ற வருத்தம் அவருக்கு இருந்திருக்க வேண்டும் . அவ் வருத்தத்தைப் போக்கி ஆற்றிக்கொள்ளும் துறையாக, இலக்கியத்துறை அவருக்கு வாய்த்ததாகவும் அதன் மூலம் தன் துயரத்தை வ.உ.சி.போக்கிக்கொண்டதாகவும் க.ப.அறவாணன் கூறுவார். (செந்தமிழ் செல்வி.செப்.1972) வ.உ.சி. யின் வாழ்க்கை வரலாற்றை படித்துப் பார்க்கின்றபோது அறவாணனின் கருத்து எவ்வளவு உண்மையென்று உணரமுடியும்.
விடுதலைப் போராட்ட இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய வ.உ.சி. யின் மாபெரும் அரசியல் பணியையும் தமிழ்பணியையும் மறந்துபோனதை எண்ணிப்பார்க்கும்பொழுது, வரலாற்றை என்றுமே புரிந்துகொள்ளாதத் தமிழரின் அவலநிலைதான் நினைவுக்கு வருகிறது.

துணைநின்ற நூல்கள்
1. அரசு.மா.ரா, வ.உ. சிதம்பரனார் , சாகித்திய அகாதெமி –முதல் பதிப்பு- 2005
2. அறவாணன்.க.ப., வ.உ.சி. யின் இலக்கணப் பதிப்புப்பணி , செந்தமிழ்ச் செல்வி- செப்டம்பர் -1972
3. சிதம்பரம்பிள்ளை. வ.உ. (ப.ஆ) தொல்-எழுத்து-இளம்-1928.
4. மேலது, பொருள், பகுதி -1 ,1933
5. மேலது, பொருள், பகுதி -2 ,1936

No comments:

Post a Comment